கர்நாடகாவில் தொடர்ந்து விலை வீழ்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ள மாம்பழ விவசாயிகளுக்கு மத்திய வேளாண்மை, விவசாயிகள் நலன் மற்றும் ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்ரீ சிவராஜ் சிங் சௌஹான் குறிப்பிடத்தக்க நிவாரணம் வழங்கியுள்ளார். மாம்பழ விலை வீழ்ச்சியை நிவர்த்தி செய்ய, மத்திய மற்றும் மாநில அரசுகள் கூட்டாக விலை வேறுபாட்டிற்கான செலவை ஏற்றுக்கொண்டு விவசாயிகளுக்கு செலுத்தும். மத்திய வேளாண் அமைச்சர் ஸ்ரீ சிவராஜ் சிங் சௌஹான் மற்றும் கர்நாடக வேளாண் அமைச்சர் ஸ்ரீ என். சாலுவராய சுவாமி இடையேயான காணொளி மாநாட்டின் போது இன்று இந்த முடிவு எடுக்கப்பட்டது. மத்திய வேளாண் செயலாளர் ஸ்ரீ தேவேஷ் சதுர்வேதியும் இந்த மெய்நிகர் கூட்டத்தில் பங்கேற்றார்.
கலந்துரையாடல்களின் போது, 2.5 லட்சம் மெட்ரிக் டன் மாம்பழங்களுக்கான விலை வேறுபாட்டிற்கு விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க இரு அமைச்சர்களும் ஒப்புக்கொண்டனர். முன்னதாக, தக்காளி மற்றும் மாம்பழங்களின் விலைகள் – குறிப்பாக தோத்தாபுரி வகை – தொடர்ந்து சரிந்து வருவதாகக் கூறி, கர்நாடக அரசு இந்திய அரசிடம் ஒரு திட்டத்தை சமர்ப்பித்திருந்தது. இன்றைய கூட்டத்தின் ஒரு பகுதியாக, கர்நாடகாவின் மொத்த மாம்பழ உற்பத்தியான 10 லட்சம் மெட்ரிக் டன்களில் 2.5 லட்சம் மெட்ரிக் டன் வரை இழப்பீடு வழங்குவது குறித்து விவாதங்கள் நடத்தப்பட்டன. தோத்தாபுரி மாம்பழங்களுக்கு விவசாயிகள் வழக்கத்தை விட மிகக் குறைந்த விலையைப் பெறுவதால், வழக்கமான சந்தை விலையிலிருந்து விலையில் உள்ள வேறுபாட்டை மத்திய அரசின் திட்டத்தின் கீழ் மத்திய மற்றும் மாநில அரசுகள் சமமாக ஏற்கும் என்று மெய்நிகர் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
திவாஹர்
