மத்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகமானது இந்தியாவில் உள்ள பிரான்ஸ் தூதரகம் மற்றும் கோஸ்டாரிகா தூதரகத்துடன் இணைந்து நேற்று (2025 மே 20, செவ்வாய்க்கிழமை) புதுதில்லியின் லோதி சாலையில் உள்ள பிருத்வி பவனில் “இரண்டாவது கடல்சார் பேச்சு வார்த்தைகளை நடத்தியது. இந்த நிகழ்வு, 2025 ஜூன் 09-13 தேதிகளில் பிரான்சின் நைஸில் நடைபெறும் 3-வது ஐக்கிய நாடுகள் சபையின் பெருங்கடல் மாநாட்டிற்கு முன்னதாக செயல்படுவதை நோக்கமாகக் கொண்டிருந்தது.
2024 பிப்ரவரி மாதத்தில் நடைபெற்ற முதலாவது கடல்சார் பேச்சு வார்த்தைகளின் வெற்றியின் அடிப்படையில் இந்த இரண்டாவது கூட்டத்தில் முன்னணி விஞ்ஞானிகள், கொள்கை வகுப்பாளர்கள், உலகளாவிய பங்குதாரர்கள் மற்றும் அரசு, கல்வித்துறை, தொழில்துறை மற்றும் சிவில் சமூகத்தின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்த மன்றம், 3-வது ஐநா பெருங்கடல் மாநாட்டின் கருப்பொருளுடன் நேரடியாக இணைந்து, நமது பெருங்கடல்களைப் பாதுகாத்தல் மற்றும் நிலையான பயன்பாடு குறித்த உறுதிப்பாடுகளை துரிதப்படுத்துவதையும், அவற்றை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டிருந்தது.
இந்த நிகழ்விற்கு மத்திய புவி அறிவியல் அமைச்சகச் செயலாளர் டாக்டர் எம். ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மேலும் இந்தியாவிற்கான கோஸ்டாரிகாவின் தூதர் திரு. நெஸ்டர் பால்டோடானோ வர்காஸ் மற்றும் பிரெஞ்சு தூதரகத்தின் துணைத் தலைவர் திரு. டேமியன் சையத் ஆகியோர் இணைத் தலைமை தாங்கினர்.
அப்போது பேசிய டாக்டர் எம். ரவிச்சந்திரன், “நீடித்த வளர்ச்சி இலக்குகள் 14 மற்றும் ஐ.நா. பெருங்கடல் காலத்தின் இலக்குகளை உண்மையிலேயே அடைய, நாம் விரிவான கடல் வள வரைபடத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் அதிநவீன தொழில்நுட்பங்களை உருவாக்க வேண்டும். கொள்கை தலையீடுகளை செயல்படுத்த வேண்டும் மற்றும் நமது கடல் எதிர்காலத்திற்கான வலுவான மனித மூலதனத்தை உருவாக்குவதில் முதலீடு செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
எஸ்.சதிஸ் சர்மா