வனப் பாதுகாப்பு , நீடித்த வன மேலாண்மை சாதனைகளை ஐநா சபை வன கவுன்சிலின் 20வது அமர்வில் இந்தியா எடுத்துரைத்தது.

2025 மே 5 முதல் 9 வரை நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபை வன கவுன்சிலின் 20வது அமர்வில் இந்தியா பங்கேற்றது.

2017–2030க்கான ஐக்கிய நாடுகள் சபையின் வனங்களுக்கான உத்திசார்  திட்டத்தின் கீழ் தன்னார்வ தேசிய பங்களிப்புகளை அடைவதற்கான தனது கடப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்திய இந்தியா, வனப் பாதுகாப்பு மற்றும் நிலையான வன மேலாண்மையில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை எடுத்துரைத்தது. ஆரவல்லி பசுமைச் சுவரின் கீழ் நிலத்தை மீட்டெடுப்பது, கடந்த பத்தாண்டுகளில் சதுப்புநிலப் பரப்பில் 7.86% அதிகரிப்பு, பசுமை இந்தியா இயக்கத்தின் கீழ் 1.55 லட்சம் ஹெக்டேர்களுக்கு மேல் காடு வளர்ப்பு மற்றும் தாயின் பெயரில் ஒரு மரக்கன்று பிரச்சாரத்தின் கீழ் 1.4 பில்லியன் மரக் கன்றகளை நடுதல் போன்ற முக்கியமான தேசிய முயற்சிகளின் விளைவாக, அண்மையில் இந்திய வன நிலை அறிக்கையின்படி, இந்தியாவில் காடுகள் மற்றும் மரங்களின் பரப்பளவு தொடர்ச்சியாக அதிகரித்துள்ளதாக இந்தக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

கூட்டு ஆராய்ச்சி, அறிவு பரிமாற்றம் மற்றும் திறன் மேம்பாடு மூலம் புலி உள்ளிட்ட ஏழு பெரிய பூனை இனங்களைப் பாதுகாப்பதை ஆதரிப்பதற்காக இந்தியாவால் தொடங்கப்பட்ட உலகளாவிய தளமான சர்வதேச பெரிய பூனை கூட்டணியில் இணைய அனைத்து ஐ.நா. உறுப்பு நாடுகளுக்கும் இந்தியா அழைப்பு விடுத்தது.

காட்டுத் தீ மேலாண்மை மற்றும் வனச் சான்றளிப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தி நாடு முன்னெடுத்த முன்முயற்சியின் விளைவுகள் அடிப்படையில் உலகளவில் நடவடிக்கை எடுக்குமாறு இந்தியப் பிரதிநிதிகள் குழு அழைப்பு விடுத்தது. காங்கோ குடியரசு, கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு மற்றும் ஆஸ்திரியா தலைமையிலான முன் முயற்சிகளை இந்தியா அங்கீகரித்து பாராட்டியது.

Leave a Reply