பதிண்டாவில் உள்ள பஞ்சாப் மத்திய பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் இன்று (மார்ச் 11, 2025) குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு கலந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், பட்டமளிப்பு விழா என்பது மாணவர்களின் வாழ்க்கையில் ஒரு கட்டத்தை நிறைவு செய்து, மற்றொரு கட்டத்தைத் தொடங்குவதாகும் என்று கூறினார். அனைத்து மாணவர்களும், தங்கள் நடத்தை மற்றும் பங்களிப்பின் மூலம், இந்தப் பல்கலைக்கழகத்திற்கும், அவர்களது குடும்பத்தினருக்கும், நாட்டிற்கும் பெருமை சேர்ப்பார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
மாணவர்கள் ஐந்து நல்ல அம்சங்களை தங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக ஆக்கிக் கொள்ள வேண்டும் என்று குடியரசுத் தலைவர் அறிவுரை கூறினார். அறிந்து கொள்வதற்கான ஆர்வம், தனித் தன்மை, ஒழுக்கம், தொலைநோக்குப் பார்வை மற்றும் தன்னிச்சையாகச் செயல்படுதல் ஆகியவையு அந்த ஐந்து குணங்கள் என்று அவர் தெரிவித்தார்.
ஆர்வமுள்ளவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்கிறார்கள். எந்தவொரு பாடத்தையும் சரியாகப் புரிந்துகொண்ட பிறகு, அந்த விஷயத்தில் அல்லது வேறு எந்தத் துறையிலும் புதிதாக ஏதாவது செய்ய முயற்சிக்க வேண்டும் என்று அவர் கூறினார். ஒழுக்கம் என்பது அர்த்தமுள்ள வாழ்க்கைக்கு அடித்தளம் என்று அவர் மாணவர்களிடம் கூறினார். ஒரு வெற்றிகரமான நபராக இருப்பதை விட நல்ல மனிதராக இருப்பது முக்கியம். தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையிலோ அல்லது வேலையிலோ அவர்கள் தேர்ந்தெடுக்கும் வாய்ப்புகள் உடனடி ஆதாயத்தின் அடிப்படையில் இருக்கக்கூடாது, ஆனால் அவர்களின் திறன்களையும் ஆர்வங்களையும் நீடித்த வழியில் பயன்படுத்துவதற்கான சாத்தியத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர் கூறினார். தன்னிச்சையாக செயல்படும் தன்மை ஒரு மதிப்புமிக்க குணம் என்று அவர் கூறினார்.
பஞ்சாப் மத்திய பல்கலைக்கழகத்தில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த மாணவர்கள் பயின்று வருவது குறித்து குடியரசுத் தலைவர் மகிழ்ச்சி தெரிவித்தார். அதன் ஆசிரியர் சமூகமும் நாட்டின் பன்முகத்தன்மையைபா பிரதிபலிக்கிறது என்று குறிப்பிட்டார். இந்த அகில இந்திய பிரதிநிதித்துவம் இந்த பல்கலைக்கழகத்தின் பாராட்டத்தக்க அம்சமாகும் என்று அவர் கூறினார். இத்தகைய நிறுவனங்கள் நமது நாட்டின் துடிப்பான கலாச்சாரத்தின் பிரதிநிதிகள் என்று அவர் குறிப்பிட்டார்.
திவாஹர்
