பாகிஸ்தானில் மின் நிலையங்களை வாடகை விட்டதில் லஞ்சம் வாங்கியதாக பாகிஸ்தான் பிரதமர் அஷ்ரப் மீது குற்றச்சாட்டு உள்ளது. இவ்வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், அஷ்ரப்பை கைது செய்ய உத்தரவிட்டது. இதையடுத்து அவருக்கு எதிரான போராட்டங்கள் வலுத்து வருகின்றன.
இந்நிலையில் பிரதமர் அஷ்ரப் மீதான ஊழல் வழக்கை விசாரித்து வரும் மூத்த அதிகாரிகளில் ஒருவரான கம்ரான் பைசல் இன்று திடீரென மரணம் அடைந்தார். தேசிய அக்கவுண்டபிளிட்டி பீரோ என்ற பாகிஸ்தான் அரசு அமைப்பின் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த பைசல், இஸ்லாமாபாத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் இறந்து கிடந்தார்.
அவர் தற்கொலை செய்துகொண்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் வேறு தூண்டுதலின் காரணமாக அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இதுபற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
பிரதமர் அஷ்ரப் மீதான ஊழல் குற்றச்சாட்டு உள்ளிட்ட 20 வழக்குகளை தேசிய அக்கவுண்டபிளிட்டி பீரோ நேரடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.