வெள்ளாடு வழங்கும் திட்டத்தின் கீழ் கிராமப்புற பொருளாதார வளர்ச்சி மேம்படுகிறது!

31 2

தமிழக அரசு கிராமப்புற பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதிலும், தனிநபர் வருமானத்தினை உயர்த்துவதிலும் பெரும் பங்கு வகிக்கும் கால்நடை பராமரிப்புத்துறைக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது.

கிராமப்புற ஏழை மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கென தமிழக அரசால் விலையில்லா கறவை மாடுகள் மற்றும் ஆடுகள் வழங்கும் திட்டம். பசுந்தீவன உற்பத்தி ஊக்குவிப்புத் திட்டம் அனைத்து கிராமங்களிலும் கோழியின வளர்ப்பை பரவலாக்கும் திட்டம் என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

தமிழகத்தில் ஏழைப் பெண்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையில் தங்களது தேவைகளை தாங்களே நிறைவு செய்வதற்காகவும், வீட்டின் பொருளாதாரத்தை மட்டுமின்றி நாட்டின் பொருளாதாரத்தையும் மேம்படுத்தவும் விலையில்லா வெள்ளாடுகள் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்து செயல்படுத்தி வருகின்றது.

பயனாளிகள் தேர்வு செய்ய கிராம அளவில் குழு அமைக்கப்பட்டு கிராமசபைக் கூட்டத்தில் ஒப்புதல் பெற்று தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். ஒரு பயனாளிகளுக்கு 3 பெண் ஆடுகளும், 1 ஆண் ஆடும் வழங்கப்படுகிறது.

கால்நடைத்துறை உதவி இயக்குநர் மற்றும் மருத்துவர்கள் நேரில் சென்று வெள்ளாடுகளை தேர்வு செய்கின்றனர். கலப்பின ஆடுகளுக்கு ரூ.10 ஆயிரம் மதிப்பிலும், போக்குவரத்து செலவு, காப்பீடு உள்ளிட்ட செலவுகளுக்காக ரூ.2 ஆயிரத்து 750 ஆக கூடுதல் ரூ.12 ஆயிரத்து 750 மதிப்பில் விலையில்லா வெள்ளாடுகள் வழங்கப்படுகிறது.

ஒவ்வொரு வெள்ளாடுகளுக்கும் ஒரு அடையாள அட்டை வழங்கப்பட்டு 15 தினங்களுக்கு ஒரு முறை கால்நடை மருத்துவர்கள் பார்வையிட்டு ஆலோசனை வழங்கி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 235 கிராம ஊராட்சிகளில் 10,120 பயனாளிகளுக்கு 40,08;0 வெள்ளாடுகள் வாங்கி வழங்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் 85 கிராம ஊராட்சிகளில் 4,148 பயனாளிகளுக்கு 16,592 வெள்ளாடுகள் வாங்கி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இது வரை 320 ஊராட்சிகளில் 14268 பயனாளிகளுக்கு 57072 வெள்ளாடுகள் ரூ.18.19 கோடி செலவில் வழங்கப்பட்டு அவர்கள் தம் குடும்பங்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்பட்டுள்ளது.

விலையில்லா கறவைப் பசுக்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் கடந்த 3 ஆண்டுகளில் 48 கிராம ஊராட்சியில் 1,820 பயனாளிகளுக்கு 1,820 விலையில்லா கறவைப் பசுக்கள் வாங்கி வழங்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் 14 கிராம ஊராட்சியில் 700 பயனாளிகளுக்கு 700 விலையில்லா கறவைப் பசுக்கள் வாங்கி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றது.

தமிழகத்தில் மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த அதிக அளவில் கால்நடைகள் வழங்கப்படுதல் மட்டும் போதுமானதல்ல அந்த கால்நடைகள் ஆரோக்கியமாக வாழ அதிக அளவில் தரமான மருத்துவ வசதிகள் கொண்ட மருந்தகங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் கீழ் பயன்பெற்ற சுகந்தலை கிராமத்தைச் சார்ந்த சிந்தாமணி கூறுகையில்,

எனக்கு திருமணமாகி 15 வருடங்கள் ஆகின்றது. என் கணவர் உடல்நிலை சரியில்லாதால் விவசாயத்திற்கு செல்வதில்லை. எனக்கு இரு குழந்தைகள் உள்ளனர். தினசரி சாப்பாட்டிற்கு மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் தற்போது அரசு வெள்ளாடுகளை வழங்கியுள்ளது. இதை எனது சொத்தாக நினைத்து எனது குடும்பத்தை காப்பாற்றுகிறேன் என்றார்.

-பி.கணேசன் @ இசக்கி.