குஜராத்தில் 7,000 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் : சமாஜ்வாடிக் கட்சி தலைவர் முலாயம்சிங் குற்றச்சாட்டு

mulaim singhநரேந்திரமோதியின் தவறான கொள்கை காரணமாக குஜராத்தில் 7,000 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்று சமாஜ்வாடிக் கட்சி தலைவர் முலாயம்சிங் குற்றஞ்சாட்டினார்.

உத்தரபிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் சமாஜ்வாடிக் கட்சி தலைவர் முலாயம்சிங் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், ”நரேந்திரமோதியின் ஆட்சியில் உரங்களின் விலை அதிகமானதால் 7,000 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். நாட்டில் உள்ள முஸ்லிம்களின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. அவர்களின் நிலையை மாற்ற எந்த அரசியல் கட்சியும் முன்வரவில்லை.

நரேந்திரமோதி பிரதமராவதை எங்களுடைய கட்சியால் மட்டுமே தடுக்க முடியும்.  எனவே, மக்கள் சமாஜ்வாடி கட்சிக்கு வாக்களிக்க வேண்டும். காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க.வுக்கு இந்த தேர்தலில் பெரும்பான்மை பலம் கிடைக்காது. மூன்றாவது அணியில் சமாஜ்வாடிக் கட்சி மிகப்பெரிய கட்சியாக அதிக இடங்களை பிடித்து மத்தியில் புதிய அரசை உருவாக்கும்” என்று கூறினார்.

-எஸ்.சதீஸ்சர்மா