குற்றப் பின்னணி கொண்டவர்கள் தேர்தலில் போட்டியிடக்கூடாது: மாநில தேர்தல் ஆணையத்துக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

நீதிபதி கிருபாகரன்.

நீதிபதி கிருபாகரன்.

குற்றப் பின்னணி கொண்டவர்கள் தேர்தலில் போட்டியிடக்கூடாது என்று நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என, மாநில தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், உள்ளாட்சி தேர்தலில் பழங்குடியினருக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை எனக் கூறி, அதுதொடர்பான அரசாணையை எதிர்த்து திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், அக்டோபர் 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த உள்ளாட்சி தேர்தலுக்கு தடைவிதித்தும், புதிய அறிவிப்பாணை வெளியிட்டு டிசம்பர் 31 –க்குள் தேர்தலை நடத்தி முடிக்கவும் உத்தரவிட்டார்.

மேலும், குற்ற பின்னணி உள்ளவர்கள் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடாத வகையில், பிரமாணப் பத்திரத்தை கண்டிப்பாக தாக்கல் செய்ய வேண்டும். அவ்வாறு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யாதவர்களின் வேட்பு மனுவை நிராகரிக்க வேண்டும்.

இதுதொடர்பாக அனைத்து அரசியல் கட்சிகளுக்கும், தேர்தல் ஆணையம் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என்றும் அந்த உத்தரவில் நீதிபதி குறிப்பிட்டிருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து மாநில தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் கொண்ட அமர்வானது, தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடைவிதிக்க மறுத்து, மனுவுக்கு இரு தரப்பும் பதிலளிக்க உத்தரவிட்டு இருந்தனர். இந்த வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது.

கடந்த வாரம் உள்ளாட்சித் தேர்தலில் வார்டு வரையறை செய்வது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த நீதிபதி கிருபாகரன், டிசம்பர் மாதத்துக்குள் தேர்தலை நடத்தி முடிக்க பிறப்பித்த உத்தரவை அமல்படுத்த எடுத்த நடவடிக்கை குறித்து பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கும், தேர்தல் ஆணையத்திற்கும் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் இடஒதுக்கீடு, தொகுதி மறுவரையறை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை 28.11.2016 திங்கள்கிழமை நீதிபதி என்.கிருபாகரன் முன்பு நடைபெற்றது.

அப்போது மாநில தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் பி.குமார், குற்றப் பின்னணி கொண்டவர்களை தேர்தலில் போட்டியிட தடைவிதிக்கும் வண்ணம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் கடிதம் எழுதியுள்ளோம்.

இந்த உத்தரவை அமல்படுத்துவதில் பல நடைமுறைச் சிக்கல்கள் இருக்கின்றன. எனவே, அரசியல் கட்சிகளிடம் பதில் பெற்று நடவடிக்கைகளை மேற்கொள்ள உரிய கால அவகாசம் தேவை என்றார்.

இதையடுத்து நீதிபதி  என்.கிருபாகரன் கூறியதாவது:
அரசியல் கட்சித் தலைவர்கள் வேட்பாளர்களை தேர்வு செய்யும் போதே பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்ற நோக்கத்தில்தான், குற்றப் பின்னணி கொண்டவர்கள் தேர்தலில் போட்டியிடக்கூடாது என்பது தொடர்பாக, உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

நீதிமன்றத்தின் உத்தரவை திறமையாகச் செயல்படுத்த முடியுமா, இல்லையா என்பது குறித்து தேர்தல் ஆணையம் எந்த கவலையும் கொள்ளத் தேவையில்லை. இந்த உத்தரவை அமல்படுத்த வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை. இதில் ஏதாவது நடைமுறை சிக்கல்கள் இருந்தால், அதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுகலாம்.

தேர்தல் அறிவிப்பு வரை காத்திருக்காமல் இந்த உத்தரவின் முக்கியத்துவத்தை உணர்ந்து அனைத்து பதிவு பெற்ற அரசியல் கட்சியினருக்கும் இதுதொடர்பாக கடிதம் எழுதி, இந்த உத்தரவை விரைந்து அமல்படுத்த வேண்டும் எனக் கூறி, வழக்கின் விசாரணையை ஜனவரி 3 –ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி என்.கிருபாகரன் உத்தரவிட்டார்.

  -ஆர்.அருண்கேசவன்.