பாடல் 2 – சக்தி வழிபாடு
சத்தியே தயாபரியே ஞானரூபி
சாம்பவியே மனோன் மணியே கபாலிசூலி
முத்தியே வேதாந்தபரையே அம்மா
முக்குணமே முச்சுடரே மாயாவீரி
வெற்றியே மூவர்களுக் கருளாய்நின்ற
வேணிகையே சாமளையே பொன்னேமின்னே
சித்திடையே சோதிடமும் முன்னுரையா
சின்மயத்தின் கணேசனுட காப்பாம்பாரே.
-புலிப்பாணி சித்தர்.
சக்தி என்றும் கருணை வடிவானவள் என்றும், ஞான வடிவினள் என்றும், ஜம்புகேசுவரரின் மனத்திற்குகந்த சாம்பவியென்றும், மனத்திற்கு மகிழ்ச்சித்தரும் சிந்தாமணி போன்ற அன்னையென்றும், கபாலியென்றும், சூலியென்றும் மூவுலகோர்க்கும் முத்தியருளும் வேதமுதலாகியும் முடிவாகியும் அமைந்த தாயென்றும், பரையென்றும் பலவாறாய் அமைந்து [சத்துவ, ராஜஸ, தாமஸம் ஆகிய] முக்குண வடிவானவளும், அக்கினி, சூரியன், சந்திரன் ஆகிய முச்சுடர் ஆனவளும், மாயை வடிவினளும், வீரமுடையவளும் பிரம்மன், அயன், அரன் ஆகிய முத்தேவர்களுக்கும் வெற்றியினை நல்கவல்ல அருள் வடிவினராய் முறையே சரஸ்வதி, இலக்குமி,பார்வதி என்று எவ்வுலகும் பரவும் பராசக்தியே உன்றன் மின்னல் போன்ற இடையினிலே மகிழ்வுடனே சின்மய முத்திரையோடு வீற்றிருந்து அருளும் கணேசனது அருளால் இந்நூலினைப் படைக்கிறேன். இனி உலகனைத்தும் பலவாறாய்ப் பரவும் பரையே சக்தித்தாயே உன் மைந்தன் கணேசருடைய அருள் நோக்கால் நான் படைக்கும் இந்நூலை அவர் பரிவுடன் காப்பார்.
பாடல் 3 – சூரியனின் ஆட்சி, உச்ச, நீச்ச,
நட்பு மற்றும் பகை வீடுகள்
தானென்ற சூரியனுக்காட்சி சிங்கத் தன்மையுள்ள மேஷமது உச்சமாகும் தானென்ற துலாமதுவும் நீசமாகும் தனியான தனுவுட னே மீனம் நட்பாம் மானென்ற மற்றேழு ராசிதானும் வரும் பகையா மென்றுனக்கு சாற்றினோம்யாம் கோனென்ற போகருட கடாட்சத்தாலே குணமான புலிப்பானி குறித்திட்டேனே. -புலிப்பாணி சித்தர். |
நவக்கிரகநாயகனான தன்னேரில்லாத சூரியதேவனுக்கு சிம்மம் ஆட்சி வீடாகவும், மேஷம் உச்சவீடாகவும், துலாம் நீச்ச வீடாகவும் அமைவதுடன் தனித்தன்மை பெற்ற தனுசுடன் மீனம் நட்பு வீடாகும். தன்னிகரில்லாத குரு நாதரான போகரது கருணையினாலே இவை நீங்கிய மற்ற ஏழு வீடுகளும் பகையாம் என்று கூறினேன்.
-டாக்டர். துரைபெஞ்சமின்., B.A.M.S., M.A. Sociology.,
Ex.Hony.A.W.Officer.,Govt. of India,
ஆயுர்வேத மருத்துவ நிபுணர் & மருத்துவ மற்றும் ஜோதிட சுவடிகள் ஆய்வாளர்.