நாட்டின் உள்நாட்டு பாதுகாப்புத் திறன்களை மேம்படுத்துவதற்கும், வலுவான உள்நாட்டு விண்வெளி தொழில்துறைச் சூழல்சார் அமைப்பின் வளர்ச்சிக்கும் உத்வேகம் அளிக்கும் வகையில், பாதுகாப்பு அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங், மேம்பட்ட நடுத்தர ரகப் போர் விமானத் தயாரிப்பு திட்டத்தை செயல்படுத்தவதற்கு ஒப்புதல் அளித்துள்ளார். வான்வழிப் பயண மேம்பாட்டு முகமை, தொழில்துறை நிறுவனங்களுடனான கூட்டாண்மை மூலம் இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளது.
இத்திட்டத்தின் செயல்பாடுகள் தனியார் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களுக்கிடையே போட்டி அடிப்படையில் சம வாய்ப்புகளை வழங்கும் வகையில் முன்மாதிரித் திட்டமாக இருக்கும். இத்திட்டத்தின் கீழ் தொழில்துறை நிறுவனங்கள் தனிப்பட்ட முறையிலோ அல்லது கூட்டு முயற்சியாகவோ அல்லது கூட்டமைப்பாகவோ ஏல நடைமுறைகளில் பங்கேற்க முடியும். இந்த ஏல நடைமுறைகளில் நிறுவனம் / ஏலதாரர் நாட்டின் சட்டதிட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கு ஏற்ப ஒரு இந்திய நிறுவனமாக இருக்க வேண்டும் என்பது அவசியம்.
விண்வெளித் துறையில் தற்சார்பு நிலையை அடையும் வகையில் முக்கியதத்துவம் வாய்ந்த ஒரு நடவடிக்கையாக இத்திட்டம் இருக்கும். அந்த வகையில் மேம்படுத்தப்பட்ட நடுத்தர ரகப் போர் விமானங்களின் முன்மாதிரியை உருவாக்குவதற்கான உள்நாட்டு நிபுணத்துவம், திறன் மற்றும் வாய்ப்புக்களைப் பயன்படுத்துவதற்கான முக்கியப் படியாக இது இருக்கும்.
மேம்படுத்தப்பட்ட நடுத்தர ரகப் போர் விமான அபிவிருத்தி பணிக்கான ஆர்வமுள்ளவர்களை கண்டறிவதற்கான விவரங்களை வான்வழி பயண மேம்பாட்டு முகமை விரைவில் வெளியிடும்.
எஸ்.சதிஸ் சர்மா