இரவு நேரத்தில் போக்குவரத்து சாலையில் மதுபோதையில் மயங்கி கிடந்த நபரை காப்பாற்றிய ‘உள்ளாட்சித்தகவல்’ ஆசிரியர்!

இன்று (11.03.2019) இரவு 9.20 மணியளவில் திருச்சி ஜங்சன் இரயில்வே மேம்பாலம் அருகேயுள்ள இரயில்வே மைதானத்திற்கும், மன்னார்புரம் நால்ரோட்டிற்கும் இடையே சாலையில் உள்ள வேகத்தடையில் தடுமாறி மதுபோதையில் மயங்கி கிடந்த சுமார் 50 வயது மதிக்கத்தக்க நபரை, அந்த வழியாக வாகனங்களில் சென்ற நபர்கள் யாரும் கண்டுகொள்ளாமல் வாகனங்களில் ஒதுங்கி சென்ற நிலையில், அச்சமயம் அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் சென்ற நமது ‘உள்ளாட்சித்தகவல்’ ஆசிரியர், பதறிபோய் மதுபோதையில் சாலையில் கிடந்த நபரை கையை பிடித்து தட்டி எழுப்பியுள்ளார். அந்த நபர் அளவுக்கு அதிகமாக மதுபோதையில் மயங்கி கிடந்ததால், அந்த நபர் கண்ணை மூடி, மூடி திறந்தாரே தவிர, எழுந்து நிற்கும் நிலையில் அவர் இல்லை.

வேறு வழியின்றி மதுபோதையில் மயங்கி கிடந்த அந்த நபரை கொஞ்சம், கொஞ்சமாக நகர்த்தி (இழுத்து) அருகில் இருந்த அரசு குடியிருப்பு பகுதிக்கு செல்லும் சாலையின் முகப்பிற்கு கொண்டு வந்து சேர்த்தார். கைவசம் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து முகத்தில் தண்ணீர் தெளித்தும் கூட, அந்த நபருக்கு போதை தெளியவில்லை.

அதுவரை சாலையில் வாகனத்தில் சென்ற அனைவரும் வேகத்தை குறைத்து அங்கு நடப்பதை வேடிக்கைப் பார்த்து சென்றார்களே தவிர, உதவி ஒத்தாசைக்கு யாரும் முன் வரவில்லை.

அந்த நேரம் அங்கு ரோந்துப் பணியில் வாக்கி – டாக்கியுடன் இருசக்கர வாகனத்தில் சீரூடையில் வந்த போலிசார் ஒருவர், நமது ‘உள்ளாட்சித்தகவல்’ ஆசிரியருக்கு நன்றி சொல்லிவிட்டு, இருசக்கர வாகனத்தை விட்டு இறங்காமலையே அங்கிருந்து சென்றுவிட்டார்.

இதையெல்லாம் சற்று தூரத்தில் நின்று கவனித்துக் கொண்டிருந்த அந்த அரசு குடியிருப்பில் குடியிருந்து வரும் ஒரு நபர், தன் உடம்பில் மேல் சட்டை இல்லாத நிலையிலும், இடுப்பில் கைலி அணிந்தபடி நமது ‘உள்ளாட்சித்தகவல்’ ஆசிரியர் நின்ற இடத்திற்கு வேகமாக நடந்து வந்தார். தனி நபராக போராடி போதை மனிதனை காப்பாற்றியதற்காக நமது ‘உள்ளாட்சித்தகவல்’ ஆசிரியரை மனதாரப் பாராட்டியதோடு, இந்த ஆளை இங்கேயே போட்டுவிட்டு போனால் கார்கள், மினிவேன்கள் வந்து திரும்பும் இடம் ஆதலால், எதாவது இந்த ஆள் மீது ஏறிவிடும். இவ்வளவு தூரம் காப்பாற்றி பிரோஷனம் இல்லாமல் போய்விடும்.

இந்த ஆளை நான் ஒரு பக்கம் தூக்குகிறேன்; நீங்கள் ஒரு பக்கம் பிடியுங்கள், இதோ அருகில் உள்ள பஸ் ஸ்டாபில் படுக்க வைத்து விடலாம். அவன் போதை தெளிந்து எப்போது வேண்டுமானாலும் எழுந்துபோகட்டும் என்று கூற, அதற்கு நமது ‘உள்ளாட்சித்தகவல்’ ஆசிரியர் மகிழ்ச்சியோடு ஒத்துக்கொண்டார். அந்த நபர் தலைப் பகுதியை பிடித்து தூக்க, நமது ‘உள்ளாட்சித்தகவல்’ ஆசிரியர் அந்த போதை மனிதனின் கால் இரண்டையும் கைலியோடு சேர்த்து பிடித்து தூக்க, அச்சமயம் இருசக்கர வாகனத்தில் இரண்டு நபர்கள் அங்கு வந்து சேர்ந்தனர். அவர்களையும் உதவிக்கு வைத்துக்கொண்டு, ஒரு வழியாக அந்த போதை மனிதனை பத்திரமாக தூக்கி அருகில் இருந்த பஸ் ஸ்டாபில் படுக்க வைத்துவிட்டு, ஒரு உயிரை காப்பாற்றிய மனநிம்மதியோடு நமது ‘உள்ளாட்சித்தகவல்’ ஆசிரியர் அங்கிருந்து புறப்பட்டுள்ளார்.

எனவே, குடிபழக்கம் உள்ள நபர்கள் சாலையில் நடப்பதோ, சாலையை கடப்பதோ அறவே கூடாது. மேலும், குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது மி மிக ஆபத்தானது. உங்கள் வருகையை எதிர்பார்த்து வீட்டில் உங்கள் பெற்றோர்களும், மனைவி மற்றும் மக்களும் வழிமேல் விழி வைத்து காத்திருப்பார்கள். அவர்களை துயரத்தில் ஆழ்த்தி விடாதீர்கள்.

மதுபழக்கத்திலிருந்து விடுபடுங்கள்…! மகிழ்ச்சியோடு வாழுங்கள்…!

-கே.பி.சுகுமார்.

 

One Response

  1. MANIMARAN March 12, 2019 8:20 am

Leave a Reply to MANIMARAN Cancel reply