நினைக்க வைத்த இறைவனுக்கு சேர்த்து வைக்க யாருமில்லை!-காவல்துறையில் பணியாற்றிய காதல் ஜோடியின் கண்ணீர் கதை.

செண்பகம்.

ஜெயதேவன்.

திருச்சி, நவல்பட்டு காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தவர் ஜெயதேவன் (வயது 28), அதே போல் திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தவர் செண்பகம்(வயது 25), இவர்கள் இருவரும் உயிருக்கு உயிராய் காதலித்து வந்தனர்.

இந்நிலையில் இருவீட்டாரும் பேசி,  ஜனவரி 20-ம் தேதி திருமணம் நடத்த முடிவு செய்திருந்தனர். இதற்கிடையே இருவீட்டாருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, திருமணம் தடைப்படும் சூழல் உருவாகியதை பொருத்துக்கொள்ள முடியாத காதல் ஜோடி மனமுடைந்த நிலையில் இருந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் 28.12.2018 காலை ஜெயதேவன் விஷமருந்தி மயங்கினார். உறவினர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு ஏற்கனவே ஒரு கிட்னி பாதிக்கப்பட்டிருந்த நிலையில் விஷமருந்தியதால் மற்றொரு கிட்னியும் பாதிக்கப்பட்டு அவர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இதற்கிடையே பாதுகாப்பு பணிக்காக ராமநாதபுரம் சென்றிருந்த செண்பகம், இந்த தகவலை கேட்டவுடன் எலி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து சக காவலர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இச்சம்பவம் திருச்சி காவல்துறையினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், கவலைக்கிடமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காவலர் ஜெயதேவன், இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.

 ஆனால், தற்போது திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காவலர் செண்பகத்தை நினைக்கும் போது, உண்மையிலுமே நெஞ்சம் பதைக்கிறது.

சேர்ந்து வாழ வேண்டிய இந்த சின்ன, சிறுசுகளை இப்படி தற்கொலைக்கு தூண்டியவர்கள் யாராக இருந்தாலும், உண்மையிலுமே தண்டிக்கப்பட வேண்டும்.

-ஆர்.சிராசுதீன்.

 

Leave a Reply