அமைச்சர் ஜெயக்குமாரின் நேர்முக உதவியாளர் கே.ஆர்.லோகநாதன் மற்றும் மகன்கள் கார் விபத்தில் பலி!-தமிழ்நாடு முதலமைச்சர் கே.பழனிச்சாமி இரங்கல்.

இன்று (07.11.018) காலை 7 மணியளவில் கடலூர் மாவட்டம், வேப்பூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட, திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில், ஐவதுகுடி என்ற இடத்தில் அமைச்சர் ஜெயக்குமாரின் நேர்முக உதவியாளர் கே.ஆர்.லோகநாதன் மற்றும் அவரது குடும்பத்தினர் பயணம் செய்த கார், அரசுப் பேருந்தின் பின்புறம் மோதியதில், அமைச்சர் ஜெயக்குமாரின் நேர்முக உதவியாளர் கே.ஆர்.லோகநாதன் மற்றும் அவரது மகன்கள் சிவராமன், நிர்மல்குமார் ஆகிய மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

விபத்தில் காயமடைந்த லோகநாதனின் மருமகள் ஷாலினி உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். படுகாயமடைந்த லோகநாதனின் உறவினர் ஒருவர்,  திருச்சி அப்போல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காயமின்றி உயிர் தப்பிய 2 வயது ரக்சன்.

அதே காரில் பயணம் செய்த லோகநாதனின் 2 வயது பேரன் ரக்சன் காயமின்றி உயிர் தப்பினான். அதிஷ்டவசமாக உயிர் தப்பிய இச்சிறுவன் சிவராமன் ஷாலினி தம்பதியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வேப்பூர் காவல்துறையினர், இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு (FIR NO: 350/2018) செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த கார் விபத்தில் பலியானவர்களுக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் கே.பழனிச்சாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

Leave a Reply