இரயில் தண்டாவாளத்தில் நின்று கொண்டு இராவணனை எரியூட்டுவதை வேடிக்கைப் பார்த்தவர்கள் மீது இரயில் மோதியதில் 100-க்கும் மேற்பட்டோர் பலி!-அமிர்தசரஸ் நகரில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.

பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸில் உள்ள சௌரா பஜார் பகுதியிலுள்ள இரயில் தண்டாவாளத்தில் நின்று கொண்டு, தசரா விழாவில் இராவணனை எரியூட்டுவதை ஆயிரக்கணக்கானோர் இன்று மாலை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அப்பகுதி முழுவதும் பட்டாசு வெடித்து இராவணனை எரியூட்டுவதை ஆராவாரத்தோடு, மகிழ்சியுடன் கொண்டாடிக்கொண்டிருந்தனர். அப்பகுதி முழுவதும் தீ பிழம்பாக காட்சியளித்தது.

அப்போது அந்த இரயில் தடத்தில் பதன்கோட்டில் இருந்து, அமிர்தசரஸ் நோக்கி ஒலி எழுப்பிக் கொண்டே, அதிவேகமாக வந்த இரயில் ஒன்று, தண்டாவாளத்தில் நின்று கொண்டு இருந்த மக்கள் கூட்டத்தினர் மீது மின்னல் வேகத்தில் சரமாரியாக மோதியதில், பெண்கள், குழந்தைகள், சிறுவர்கள், இளைஞர்கள் உள்பட 100-க்கும் மேற்படவர்கள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். ஏராளமானோர் உடல் சிதைக்கப்பட்ட நிலையில் படுகாயமடைந்தனர்.

உள்ளூர் நிர்வாகம், காவல்துறை மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள் அனைவரும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

பட்டாசுகளின் சத்தம் காரணமாக இரயில் வரும் ஒலி சரியாக கேட்கவில்லை அதனால்தான் இந்த விபரீத விபத்து என்று உயிர் தப்பியவர்கள் கூறுகின்றனர்.

உயிர் இழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வழங்க, பஞ்சாப் முதலமைச்சர் அமரிந்தர் சிங் உத்தரவிட்டுள்ளார்.

-எஸ்.சதிஸ் சர்மா.

Leave a Reply