கார் திருடிச் சென்ற குற்றவாளியை விரட்டிப் பிடித்த பெண் உதவி ஆய்வாளர்!

அண்ணாநகரில் மருத்துவமனை முன்பு நிறுத்தி வைத்திருந்த மருத்துவரின் காரை திருடிச் சென்ற குற்றவாளியை வாகனச் சோதனையின் போது விரட்டிச் சென்று மடக்கிப்பிடித்த அண்ணாநகர் காவல் நிலைய குற்றப்பிரிவு பெண் உதவி ஆய்வாளரை காவல் ஆணையர் நேரில் அழைத்து பாராட்டினார்.

அடையாறு இந்திரா நகரைச் சேர்ந்த மருத்துவர் அருண்குமார்(வயது-49) என்பவர் 14.10.2018 அன்று இரவு சுமார் 09.30 மணியளவில் தனது Honda City காரை சுந்தரம் மெடிக்கல் பவுண்டேசன் மருத்துவமனை முன்பு நிறுத்திவிட்டு சென்ற சிறிது நேரத்தில், காரை யாரோ திருடி சென்று விட்டனர்.

அண்ணாநகர் காவல் நிலைய குற்றபிரிவு பெண் உதவி ஆய்வாளர் M.பெனாசீர்பேகம் என்பவர் தலைமையில் காவல் குழுவினர் 15.10.2018 சுமார் பகல் 01.30 மணியளவில் வாகனச் சோதனை செய்து கொண்டிருந்தபோது, மேற்கூறிய மருத்துவரின் கார் பதிவு எண் TN 07 CM 2424 கொண்ட Honda City காரை அடையாளம் கண்டு, அதனை நிறுத்த முயன்ற போது நிறுத்தாமல் சென்றவரை, தனது வாகனத்தில் விரட்டி சென்று மடக்கி பிடித்து கைது செய்தார். காரை திருடி ஓட்டிச்சென்ற குற்றவாளியின்  பெயர் பிரபுதாஸ், (வயது-24), அடையாறு என தெரியவந்தது.

மேற்படி சம்பவத்தில் விழிப்புடன் செயல்பட்ட பெண் உதவி ஆய்வாளர் M.பெனாசீர்பேகத்தை சென்னை பெருநகர காவல் ஆணையர் அ.கா.விசுவநாதன் 16.10.2018 அன்று நேரில் அழைத்து வெகுமதி வழங்கிப் பாராட்டினார்.

 -எஸ்.திவ்யா.

Leave a Reply