தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து நடைப்பெற்றப் போராட்டத்தில் கூச்சல் குழப்பம்!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி போராட்டம் நடத்தியவர்கள் மீது போலிசார் துப்பாக்கி சூடு நடத்தியதை கண்டித்து, திருச்சி திருவெறும்பூர் பாரத் மிகுமின் (BHEL) நிறுவனத்தின் அனைத்து தொழிற்சங்கம் சார்பில் இன்று காலை நடந்த போராட்டத்தில், அதிமுக தொழிற்சங்க நிர்வாகிகளுக்கும், சிஐடியு தொழிற்சங்க நிர்வாகிகளுக்கும் இடையே வாக்குவாதம் மற்றும் தள்ளு, முள்ளு ஏற்பட்டதால் பரப்பரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையினால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதால், அந்த ஆலையை மூட வலியுறுத்தி பொதுமக்கள் சார்பில் போராட்டம் கடந்த 100 நாட்களாக நடந்து வந்தது. அதன் தொடர்ச்சியாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் மற்றும் ஸ்டெர்லைட் ஆலையை முற்றுகையிடம்  போராட்டம் நேற்று முன்தினம் நடந்தது.

தூத்துக்குடியில் கடந்த 99 நாட்களாக அமைதியாக நடைப்பெற்று வந்த போராட்டம், வெளியூர் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து வந்து இறங்கிய ஒரு சில புரட்சிக்கர அமைப்புகளை சேர்ந்தவர்களின் வழிக்காட்டுதல் மற்றும் அத்துமீறலால் வன்முறை வெடித்தது. இதனால் காவல் துறையினருக்கும், போராட்டகாரர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. பிறகு அது கட்டுக்குள் அடங்காத கலவரமாக மாறியது. அப்போது போராட்டகாரர்களுக்கும், போலிசாருக்கும் இடையே நடைப்பெற்ற வன்முறையில் கல்வீச்சு, தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சு, இறுதியில் துப்பாக்கி சூட்டில் முடிந்தது. போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் அப்பாவி பொதுமக்கள் சிலரும் உயிரிழந்தனர். இருதரப்பிலும் ஏராளமானோர் காயமடைந்தனர்.

இதனை கண்டித்து தமிழக முழுவதும் அரசியல் கட்சிகளும், வணிகர் சங்கங்களும், தன்னார்வ அமைப்புகளும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது. அதன் ஒருப்பகுதியாக திருச்சி திருவெறும்பூர் பாரத் மிகுமின் (BHEL) நிறுவனத்தின் அனைத்ததொழிற்சங்கம் சார்பில் (BHEL) மெயின் கேட் முன்பு கண்டண ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

அந்த ஆர்ப்பாட்டத்திற்கு தொமுச தொழிற்சங்க பொதுச்செயலாளரும், கூட்டுக்குழு ஒருங்கிணைப்பளருமான எத்திராஜ் தலைமை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் அம்பேத்கார் யூனியன் பொதுசெயலாளர் சந்திரசேகர், ஏடிபி நிர்வாகி சங்கர், சிஐடியு அருணன், பிஎம்எஸ் சங்கர், டிடிசி சசிகுமார், ஐஎன்டியூசி மதன், புஜாதமு சுந்தர்ராஜன், பிஎன்எஸ் இளையராஜா, எம்எல்எப் கருணாகரன், எல்எல்எப் விஜயபாலு, திக அசோக்குமார் உள்ளிட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

அப்போது தொழிற்சங்க நிர்வாகிகள் அதிமுக அரசை கண்டித்து பேசியதோடு, சிலர் அதிமுக கட்சியையும், தமிழக முதலமைச்சரையும் கண்டித்து பேசினார்கள்.

இந்நிலையில், அதிமுக தொழிற்சங்கமான ஏடிபி தொழிற்சங்கத்தை சேர்ந்த நிர்வாகி சங்கர், தூத்துக்குடி துப்பாகிசூடு சம்பவம் கண்டிக்கத்தக்கது, வருந்ததக்கது. அதுபோல் மாஞ்சோலை துப்பாக்கி சூடு மற்றும் மேற்கு வங்கத்தில் டாட்டா நிறுவனம் தொழிற்சாலை அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்துவதற்காக போலீசாருடன்  கம்யூனீஸ்ட் கட்சியினரும் சேர்ந்து பல பெண்களை கற்பழித்ததோடு கொலையும் செய்தனர் என்று பேசினார்.

அதற்கு சிஐடியு தொழிற்சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வாக்கு வாதத்தில் ஈடுப்பட்டதோடு, சிஐடியூ மற்றும் ஏடிபி தொழற்சங்கத்தினரிடையே நடந்த வாக்குவாதம் தள்ளு முள்ளாக மாறியது. அதனால் அங்கு பதட்டமும் பரப்பரபும் ஏற்பட்டது.

பின்னர் அங்கிருந்த அனைத்தொழிற்சங்கங்களும் அதிமுக தொழிற்சங்க நிர்வாகியை கண்டித்ததோடு, எத்திராஜ் அவர்களை வெளியில் போகும்படி கூறினர். அதன் அடிப்படையில் ஏடிபி தொழிற்சங்க நிர்வாகிகள் அங்கிருந்து வெளியேறி சென்றனர்.

பின்னர் ஏடிபி தொழிற்சங்க பொதுச்செயலாளர் கார்த்திக், செய்தியாளர்களிடம் கூறியதாவது:

எங்கள் தொழிற்சங்கம் இந்த போராட்டததில் கலந்துகொள்ள கூடாது என்றார்கள் ஆனால், நாங்கள் கலந்து கொள்வோம். தூத்துக்குடியில் நடந்து துப்பாகிசூடு சம்பவம் கண்டிக்கதக்கது. அதனால்தான் எங்கள் தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

அப்படி கலந்துகொண்டபோது அவர்கள் தூத்துக்குடி பிரச்சனைக்கு அரசங்கத்தை குறை சொன்னது தப்பில்லை. எங்கள் கட்சியையும், தலைவர்களையும் இழிவாக பேசினார்கள். அதனால்தான் நாங்கள் எங்கள் நிர்வாகிகள் மற்றவர்கள் ஆட்சி செய்த மாநிலத்திலும் இப்படி சம்பவம் நடந்துள்ளது என்பதை எடுத்து கூறினோம். சிஐடியூ தொழிற்சங்கத்தால் இதை பொறுத்து கொள்ளமுடியாமல் சண்டைக்கு வந்துவிட்டனர் என்றார்.

இதையெல்லாம் பார்க்கும் போது “அழுக்கை போக்க சோப்பு; ஆனால், அந்த சோப்பு டப்பா அழுக்கு” என்ற கவிதை வரிகள்தான் என் நினைவுக்கு வருகிறது.

 -ஆர்.சிராசுதீன், வீ.குணசேகரன்.