ஏற்காடு மலைப்பாதையில் பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதி வாலிபர் பலி!

சேலம் மாவட்டம், ஏற்காடு மலைப்பாதையில் பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதியதில் வாலிபர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

சேலம் மாவட்டம், கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த யுவராஜ் மகன் அருண்குமார் (வயது 20) புகைப்பட கலைஞர், அம்மாப்பேட்டை பகுதியை சேர்ந்த சுந்தர்ராஜ் மகன் சூர்யநாரயணன் (வயது 22) தனியார் கம்பெனி ஊழியர், கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த தேசிகன் மகன் விஜய் (வயது 20) சென்னையில் உள்ள தனியார் கம்பெனி ஊழியர், மூவரும் ஹோண்டா யுனிகார்ன் பைக்கில் ஏற்காடு சுற்றி பார்க்க வந்துள்ளனர்.

ஏற்காட்டை சுற்றி பார்த்துவிட்டு சேலம் திரும்பியுள்ளனர், பைக்கை விஜய் ஓட்டியுள்ளார். மலைப்பாதையின் 20- ஆவது கொண்டை ஊசி வளைவு பகுதியில் சென்றுக்கொண்டிருந்த போது எதிரில் வந்த தனியார் பேருந்தின் பின் டயர் பகுதியில் பைக் மோதியது. இதில் பைக்கில் பின்னால் அமர்ந்து சென்ற அருண்குமாரின் பின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அதிகளவில் இரத்தம் வெளியேறியது.

சம்பவ இடத்திற்கு வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள், அருண்குமாரை பரிசோதித்து இறந்து விட்டதாக கூறினர்.

பேருந்தை ஏற்காடு, ஒலக்கோடு கிராமத்தை சேர்ந்த ராமன் மகன் பொன்ராஜ் (வயது 20) என்பவர் ஓட்டியுள்ளார். இது குறித்து ஏற்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

-நவீன் குமார்.

 

 

Leave a Reply