திருவாரூர் தியாகராஜர் ஸ்வாமி ஆலய கமலாலயக் குளத்தில் பயன்படுத்தபடாதப் படகுகள்!

திருவாரூர் நகருக்கே பெருமை சேர்க்கும் வகையில் தியாகராஜர் ஸ்வாமி ஆலயம் நடுநாயகமாக வீற்றிருக்கிறது. இக்கோவில் முன் பல ஏக்கர் பரப்பளவில் கமலாலயக்குளம் பிரம்மாண்டமாய் அமைந்துள்ளது. கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு என குளத்தைச் சுற்றிலும் தெருக்கள் உள்ளன.

ஆண்டு தோறும் “ஆழித்தேரோட்டம்” கோலாகலமாக நடப்பது வழக்கம். வெளியூர் பக்தர்கள் மட்டுமின்றி, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் இக்கோவிலையும், கமலாலயக் குளத்தையும் ரசித்து செல்கின்றனர்.

தற்போது கோடை காலம் என்பதால், திருவாரூர் மட்டுமின்றி பக்கத்து மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும், தங்கள் குழந்தைகளுடன் இக்கோவிலுக்கு வருகின்றனர்.

வேளாங்கண்ணி, நாகூர் செல்லும் மக்கள் திருவாரூர் வழியாகதான் செல்கிறார்கள். இதனால்  நாளுக்கு நாள்  சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், கமலாயக் குளத்தில் இரண்டு படகுகள் பயன்படுத்தபடாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே, காலை, மாலை வேளைகளில் குளத்தின் நடுவில் உள்ள மண்டபத்துக்குச் சென்று திரும்பவும், குளத்தின் அழகை ரசிக்கவும் படகுகளை இயக்க கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும்.

சிறு குழந்தைகளுக்கு ரூ.5 என்றும், பெரியவர்களுக்கு ரூ.10 என்றும் கட்டணம் நிர்ணயித்து படகு இல்லத்தில் இருந்து சவாரியை துவங்க வேண்டும். இதனால் கோவிலுக்கு வருவாய் வருவதுடன், பக்தர்களும், சுற்றுலாப்பயணிகளும் மற்றும் குழந்தைகளும்  மகிழ்ச்சியடைவார்கள்.

  -க.குமரன்.

Leave a Reply