ஜனவரி 31 தைப்பூசம்!- பழனி மலை முருகன் கோயிலுக்கு பக்தர்கள் பாத யாத்திரை….!

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி கோவில் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாகும். மூலவர் அருள்மிகு தண்டாயுதபாணி. பதினெட்டு சித்தர்களில் ஒருவரான போகர் மூலவர் சிலையை நவபாஷாணத்தால் செய்து நிறுவியுள்ளார்.

தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். தைப்பூசம் முருகனுக்கு உகந்த நாள். தமிழ் பஞ்சாங்கப்படி தை மாதம் பத்தாவது மாதமாகும். இது பூஜா மாதம் என்றும் அழைக்கப்படுகிறது.

தைப்பூசம் ஆண்டு தோறும் தை மாதம்  பூச நட்சத்திரமும் பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகனுக்கு எடுக்கப்படும் விழாவாகும். நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரமாகும். இவ்விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது.

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி கோவிலில் தைப்பூசம் பத்து நாட்கள் நடைபெறும். ஏழாம் நாள் விழாவில் தேரோட்டம் நடைபெறும். முருகன் தன் இரு துணைவியரான வள்ளி மற்றும் தெய்வயானையுடன் திருமணக்கோலத்தில் ரதவீதிகளில் தேரில் பவனி வருவார். பத்தாம் நாள் தெப்போற்சவம் நடைபெறுகிறது.

தைப்பூசத்தன்று மக்கள் பழனியில் குவிவது வழக்கம். பக்தர்கள் பல பகுதிகளிலிருந்து பாத யாத்திரையாக பழனிக்கு வருகிறார்கள். நேர்த்திக் கடனாக முருகனுக்கு பக்தர்கள் பலநாட்கள் விரதமிருந்து காவடி எடுக்கிறார்கள்.

காவடி எடுப்பவர்கள் வரும் வழிகளில் பாடும் பாடல்கள் “காவடிசிந்து” என்று அழைக்கப்படுகின்றன.

அலகு குத்துதல், சர்க்கரை காவடி, தீர்த்தக் காவடி, பறவைக் காவடி, பால் காவடி, மச்சக்காவடி, மயில் காவடி… இப்படி காவடிகளில் பல வகை உண்டு.

அலகு குத்துதல் – நாக்கு, கன்னம், கை, உடம்பின் பிற பகுதிகளில் சிறிய பெரிய வேல் வடிவமுடைய ஊசியால் குத்திக்கொண்டு கோவிலுக்கு வருதல். சிலர் சின்ன ரதம் போன்ற வண்டியை பக்தர்களின் முதுகில் கொக்கிகளால் இணைத்து இழுத்து வருகிறார்கள்.

சர்க்கரை காவடி – சர்க்கரை பக்தர்களால் கால்நடையாக எடுத்து வரப்படுகிறது.

தீர்த்தக் காவடி – கொடுமுடியிலிருந்து (கரூர் மாவட்டம்) காவிரி தீர்த்தம் பக்தர்களால் கால்நடையாக எடுத்து வரப்படுகிறது.

பறவைக் காவடி – அலகு குத்தியவர் தொங்கியவாறு ஒரு வாகனத்தில் அழைத்து வரப்படுகிறார்.

பால் காவடி – பால்குடம் காவடியாக பக்தர்களால் கால்நடையாக எடுத்து வரப்படுகிறது.

மச்சக்காவடி – மீன் நீருடன் பக்தர்களால் கால்நடையாக எடுத்து வரப்படுகிறது.

மயில் காவடி – மயில் தோகையால் அலங்கரிக்கப்பட்ட காவடி பக்தர்களால் கால்நடையாக எடுத்து வரப்படுகிறது.

தைப்பூசத்தன்று தான் உலகம் தோன்றியதாக ஐதீகம். முருகன் தமிழ்க்கடவுள் ஆவார்.முருகன் என்றால் அழகு என்று பொருள். முருகன் தேவ சேனாதிபதி ஆகையால் இவர் ஒரு போர்க்கடவுள் ஆவார். தை பூசத்தன்று முருகன் தருகாசுரனை வதம் செய்த நிகழ்வு ஒரு விழாவாக பழனியில் அனுஷ்டிக்கப்படுகிறது.

தைப்பூசத்தை முன்னிட்டு பழனி முருகன் கோயிலுக்கு தமிழகம் மட்டுமல்லாது அண்டை மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் விரதம் இருந்து ஆயிரக்கணக்கான முருக பக்தர்கள் பாத யாத்திரையாக வருகிறார்கள். பாதயாத்திரையாக வரும் பக்தர்கள், மார்கழி மாத ஆரம்பத்தில் துளசி மாலை அணிந்து விரதத்தை தொடங்குவார்கள்.

சஷ்டிகவசம், சண்முக கவசம், திருப்புகழ் போன்ற பாடல்களை அன்றாடம் பாராயணம் செய்து தைப்பூசத்தன்று பழனி முருகன் கோயிலில் சிறப்பு வழிபாடு செய்து விரதத்தை முடிப்பார்கள். ஆறுமுகப் பெருமானின் அருளை அடைவதற்கு தைப்பூசம் உகந்த நாளாகப் போற்றப்படுகிறது.

 –டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

படங்கள் : மு.துளசி மணி.

-எஸ்.திவ்யா.

Leave a Reply