ஆசியாவில் மிக சிறந்த மருத்துவமனைகளில் ஒன்றாக இருக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில், இலங்கையில் நடைப்பெற்ற இறுதி யுத்ததிற்கு பிறகு, அதாவது நவம்பர் 12 , 2009 அன்று புதிய இராணுவ மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
ரூ 6.5 பில்லியன் கட்டுமான செலவில், அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் ஊனமுற்ற வீரர்களுக்கு சிறந்த சுகாதார சேவைகளை வழங்கும் வசதிகள் கொண்ட புதிய இராணுவ மருத்துவமனையை இலங்கை அரசாங்கம் கட்டி முடித்துள்ளது.
இப்புதிய இராணுவ மருத்துவமனையை ஒட்டுமொத்த படைபரிவாரங்களுடன் இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (05.05.2014) திறந்து வைத்தார்.
இந்த இராணுவ மருத்துவமனையில் ஒரே நேரத்தில் 1,024 இராணுவத்தினர் தங்கி சிகிச்சை பெற வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அத்துடன் ஆயிரம் இராணுவத்தினர் மற்றும் அவர்களின் உறவினர்கள் வெளிநோயாளிகளாக சிகிச்சை பெறவும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
அமெரிக்கா தனது நாட்டுக்காக போராடும் இராணுவத்தினரையும் ஓய்வுபெற்ற படையினரையும் நன்றாக கவனிப்பதில்லை என இன்று இவ்விழாவில் உரையாற்றிய இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் தயா ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா போன்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது இலங்கை தனது போர் வீரர்களுக்கு மிக சிறந்த பாதுகாப்பை வழங்கி வருகிறது.
அமெரிக்கா போருக்கு அதிகளவில் பணத்தை செலவழித்து வருகிறது. ஆனால், போரில் ஈடுபடும் படையினரின் நிலைமைகள் மோசமாக உள்ளன. அத்துடன் அந்த நாட்டில் ஓய்வுபெற்ற இராணுவ வீரர்களை பார்க்கும் போது வருத்தமாக உள்ளது.
அண்மையில் அமெரிக்க இராணுவத்தினர் சிலரை சந்தித்து இலங்கையில் இராணுவத்தினருக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்து விளக்கினேன். அப்போது மறுஜென்மத்தில் இலங்கையில் பிறக்க வேண்டும் என அவர்கள் கூறினர். இவ்வாறு இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் தயா ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.