ம.தி.மு.க பிரமுகர் அ.மலர்மன்னன் கவலைக்கிடம்!

 

அ. மலர்மன்னன்

அ. மலர்மன்னன்

முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், ம.தி.மு.க அரசியல் ஆலோசனைக்குழுச் செயலாளருமான திருச்சி அ.மலர்மன்னன்(வயது 77)  சிறுநீரகக் கோளாறு காரணமாக நீண்டகாலமாக அவதிப்பட்டு வந்தார். திருச்சி, அண்ணாமலை நகரில் வசித்து வந்த அவருக்கு, நேற்று (03.05.2014) உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் அவரை திருச்சியில் இருந்து சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு அவரது குடும்பத்தினர் ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து சென்றனர். அங்கு அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனாலும், அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை. செயற்கை முறையில் சுவாசம் செலுத்தப்பட்டு வருவதாக தெரிகிறது. தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்து வருகிறார்.

தி.மு.க.வில் அ.மலர்மன்னன் இருந்த போது, தி.மு.க. தலைவர் மு.கருணாநிதிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் மிகவும் நெருக்கமானவராக இருந்தார். மு.கருணாநிதியின் வீட்டில் அடுப்படி வரை சென்று வரக்கூடிய அளவிற்கு விசுவாசியாக இருந்தார்.

இதற்கிடையில் கொலைப் பழி சுமத்தி வை.கோபால்சாமியை(வைகோ) தி.மு.க.வில் இருந்து, மு.கருணாநிதி நீக்கிய போது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.மலர்மன்னனும் தி.மு.க.வில் இருந்து வெளியேறினார்.

அ.மலர்மன்னன் தி.மு.க.வில் இருந்த போது, திருச்சி, முத்தரசநல்லூர் இரயில் நிலைய வெடிக்குண்டு வழக்கில் சிக்கி சிரமப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

-இரா.அருண்கேசவன்.