அழகிரி ஆதரவாளர்களுக்கு அன்பழகன் எச்சரிக்கை!

nepolian dmk secretary

தி.மு.க.வில் இருந்து தற்காலிகமாக விலக்கி வைக்கப்பட்டுள்ள மு.க.அழகிரியுடன், திமுக தொண்டர்கள் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று திமுக கட்சியின் பொதுச் செயலாளர் அன்பழகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று (19.03.2014) வெளியிட்டுள்ள அறிக்கையில், “தி.மு.க.வின் கட்டுப்பாட்டைச் சீர்குலைக்கும் வகையில், யார் செயல்பட்டாலும் அதை என்றைக்கும் கட்சியின் தலைமை பொறுத்துக் கொள்ளாது என்பதைக் கடந்தகால கழக வரலாற்றை தெரிந்தவர்கள் உணர்வார்கள்.

இன்றையச் சூழ்நிலையில் கழகத்திலிருந்து ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, விலக்கி வைக்கப்பட்டுள்ள தென்மண்டல முன்னாள் அமைப்புச் செயலாளர் மு.க.அழகிரி, தனது ஆதரவாளர்களுடன் கலந்து பேச சந்திப்பு என்ற பெயரில் ஆங்காங்கு கூட்டங்கள் ஏற்பாடு செய்து, தி.மு.க தொண்டர்களைக் குழப்பத்தில் ஆழ்த்துகின்ற செய்தி கட்சிக்குக் கிடைத்து வருகிறது.

கட்சியில் இருந்து தற்காலிகமாக விலக்கி வைக்கப்பட்டுள்ள மு.க. அழகிரியுடன் எந்தவிதமான தொடர்பும் கட்சித் தொண்டர்கள் யாரும், எந்தப் பொறுப்பில் உள்ளவர்களாயினும் வைத்துக் கொள்ளக் கூடாது என்பதை மிகவும் கண்டிப்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வறிக்கையை மீறி கட்சி உறுப்பினர் எவரும் செயல்படுவதாக தலைமைக்குத் தகவல் வருமேயானால், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ளப்படும்” என்று எச்சரித்துள்ளார்.