கோத்தபாய ராஜபக்ச இந்தியா வருகிறார்!

ghotabaya_rajapaksaஇலங்கை பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சகத்தின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, 06.03.2014 அன்று இந்திய தலைநகரான புதுடில்லிக்கு பயணம் செய்யவிருப்பதாக தெரியவந்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்தும் வகையிலேயே அவரது பயணம் அமையும் என்றும் தெரிகின்றது.

இந்தியாவில் இரண்டு நாட்கள் பயணம் மேற்கொள்ளும் கோத்தபாய ராஜபக்ச, இந்திய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என்று தெரிகிறது.

ஐ.நா. சபையின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா சமர்ப்பித்துள்ள தீர்மானம் தொடர்பாகவும், இந்த இக்கட்டானத் தருணத்தில் இலங்கைக்கு ஆதரவாக இந்தியா இருக்க வேண்டும் என்ற வேண்டுகோளையும் கோத்தபாய ராஜபக்ச முன்வைப்பார் என்றும் தெரிகின்றது.