இலங்கை கடற்படை அட்டகாசம் : தமிழக மீனவர்கள் சிறைப்பிடிப்பு !

Srilanka-Navyதமிழக மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படை சிறை பிடித்து சென்றுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாபட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த 500–க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். அவர்கள் அனைவரும் இன்று காலை கரை திரும்பவேண்டும். இதற்கிடையே நள்ளிரவில் 6 படகுகளை சேர்ந்த 22 மீனவர்கள் கோடியக்கரைக்கு தென்கிழக்கே இந்திய கடல் எல்லையில் வலைகளை விரித்து மீன் பிடித்து கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு அதிவேகமாக இலங்கை கடற்படைக்கு சொந்தமான ரோந்து கப்பல் வந்தது. அதில் இருந்த கடற்படை வீரர்கள் தமிழக மீனவர்களின் 6 படகுகளையும் சுற்றிவளைத்தனர். பின்னர் மீனவர்களின் படகுகளில் தாவிய அவர்கள் வலைகளை அறுத்து சேதப்படுத்தியதோடு, பிடித்து வைத்திருந்த விலை உயர்ந்த மீன்களையும் எடுத்து கொண்டனர்.

இதையடுத்து மீனவர்கள் 22 பேரையும் சிறைபிடித்த கடற்படையினர் அவர்களை படகுகளுடன் இலங்கைக்கு கொண்டு சென்றனர். அங்குள்ள காங்கேசன் கடற்படை முகாமில் அடைத்து வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஏற்கனவே 30–க்கும் மேற்பட்ட புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் இலங்கை சிறையில் வாடிவரும் நிலையில் மீண்டும் 22 பேர் சிறை பிடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.