கொமன்வெல்த் நாடுகள் பலவற்றில் விடுதலைப் புலிகள் இன்னமும் செயற்படுகின்றனர். -கோத்தாபய

ghotabaya_rajapaksaகொமன்வெல்த் மாநாட்டுக்கு வரும் வெளிநாட்டுப் பிரதிநிதிகள், பிரிவினைவாத உணர்வுகளை வலுப்படுத்தக் கூடாது என்று சிறிலங்கா பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.  யாழ்ப்பாணத்தில் இருந்து திரும்பும் போது, கனேடிய நாடாளுமன்றச் செயலர் தீபக் ஒப்ராய், ஆனையிறவில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அவர்,

விடுதலைப் புலிகள் இன்னமும் கனடாவிலும், ஏனைய கொமன்வெல்த் நாடுகள் பலவற்றிலும் இன்னமும் செயற்படுகின்றனர்.

கொமன்வெல்த் மாநாட்டுக்கு கனடாவும் ஏனைய சில நாடுகளும் தமது கீழ்மட்டப் பிரதிநிதிகளை அனுப்பியதற்கான சூழ்நிலைகளை நாம் அறிவோம்.

விடுதலைப் புலிகளைத் தூய்மைப்படுத்தும் முயற்சிகள் குறித்து சிறிலங்கா உண்மையிலேயே கவலை கொள்கிறது. சர்ச்சையை ஏற்படுத்தாத இடமொன்றில், கனேடிய பிரதிநிதி மலர்வளையம் வைத்திருக்க முடியும்.

பல்வேறு நாடுகளின் தலைநகரங்களில் இருந்து மேற்கொள்ளப்படும் செலவுமிக்க பரப்புரைத் திட்டங்களை சிறிலங்காவினால் புறக்கணிக்க முடியவில்லை.

விடுதலைப் புலிகள் நந்திக்கடலில் அழிக்கப்படும் வரையில், அவர்களால் ஏற்படுத்தப்பட்ட மரணங்கள், அழிவுகளை மேற்குலகம் மனதில் கொள்ள வேண்டும்.” என்றும் அவர் கூறியுள்ளார்.