வியட்னாம் போரின் போது அமெரிக்க இராணுவம் இலட்சக்கணக்கான எடையுள்ள குண்டுகளை வீசியது. அதில் ஒரு குண்டு அங்கு வசித்த ஹோவான் தான்ஹா என்பவருடைய வீட்டைத் தாக்கி மனைவி, 2 குழந்தைகள் இறந்தனர். இதனால் அவர் பயந்து போய் ஒரு குழந்தையை தூக்கிக்கொண்டு காட்டிற்குள் சென்றார்.
இது 1971-ம் ஆண்டில் நடைபெற்றது. போர் 1975 -ல் முடிவுக்கு வந்த பிறகும் அவர் ஊர் திரும்பவில்லை. அடர்ந்த காட்டில் மூங்கில் கொண்டு வீடு கட்டி, மரப்பட்டையால் தயாரித்த ஆடையை உடுத்திக்கொண்டு பழங்களை தின்று தந்தையும், மகனும் வாழ்ந்தனர்.
சில வாரங்களுக்கு முன்பு சிலர் காட்டில் விறகு பொறுக்கச் சென்ற போது இவர்கள் 2 பேரின் நடமாட்டத்தை கண்டு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். உடனே அதிகாரிகள் குழுவினர் காட்டில் 5 மணி நேரம் தீவிர தேடுதலுக்கு பின் தந்தை, மகனை மீட்டார்கள். தற்போது தந்தைக்கு 82 வயதும், மகனுக்கு 41 வயதும் ஆகிறது. கிட்டத்தட்ட 2 பேரும் 42 ஆண்டுகளை காட்டுவாசிகளை போலவே கழித்திருக்கிறார்கள்.
மீட்கப்பட்ட ஹோவான் தான்ஹா உடல் மெலிந்து நடக்க கூட முடியாத நிலையில் இருந்ததால் அவரை தூக்கி வந்து மருத்துவ சிகிச்சை அளித்தார்கள். மற்றவருக்கோ ஓரிரு வார்த்தை மட்டுமே பேச முடிகிறது.
இச்சம்பவம் பற்றி நகர்புறத்தில் வசிக்கும் ஹோவானின் மற்றொரு மகன் கூறும்போது, ‘சுமார் 20 ஆண்டுக்கு முன்பு தந்தையை சந்தித்த போது வெளியே வரும்படி கூறினேன். ஆனால் என்னுடைய கோரிக்கைக்கு அவர் செவிசாய்க்க மறுத்து காட்டிலேயே வசித்தார்’ என்று கூறினார்.