இலங்கையின் தலைநகர் கொழும்பின் புறநகர்ப் பகுதியான பொரலஸ்கமுவ பெப்பிலியான சந்தியில் முஸ்லிம்களுக்கு சொந்தமான பிரபல ‘பெஷன் பக்’ துணிக்கடை மீது பௌத்த பிக்குகள் தலைமையில் நூற்றுக்கணக்கானோர் நேற்றிரவு (29.03,2013) 8 மணியளவில் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
கற்களை வீசியும் வேறு ஆயுதங்களாலும் இத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் ஒரு மணித்தியாலத்திற்கும் மேலாக இத் தாக்குதல் நீடித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக குறித்த விற்பனை நிலையத்தின் கட்டிடத்திற்கும், உடைமைகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளனர். பிக்குகள் தலைமையிலான கூட்டம் திடிரென்று 500 பேரளவில் அதிகரித்ததாகவும், இதன் போது அங்கு செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வன்முறைகள் பரவமுன்னர், அங்கிருந்த பொலிசார் வன்முறையாளர்களைத் தடுக்காது வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததாக நேரில் கண்டவர்கள் கூறுகின்றனர். வன்முறைகள் பரவிய பின்னரே, பொலிசார் பின்னர் தலையிட்டு நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
சிறப்பு அதிரடிப் படையினரையும் காவல்துறையினரையும் மேலதிகமாக ஈடுபடுத்தி பிரதேசத்துக்கு பாதுகாப்பு’ அளித்துவருவதாக இலங்கை காவல்துறை பேச்சாளர் புத்திக சிறிவர்தன தெரிவித்துள்ளார்.