2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல், ஹெலிகாப்டர் பேர ஊழல் என தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டுக்களில் சிக்கி தத்தளித்து வருகிற மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு மீது, அந்த அரசுக்கு வெளியே இருந்து ஆதரவு அளித்து வருகிற சமாஜ்வாடி கட்சி எம்.பி. உர ஊழல் குற்றச்சாட்டை பகிரங்கமாக வெளியிட்டு பாராளுமன்றத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.
மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசில் மத்திய ரசாயன மற்றும் உரத்துறை அமைச்சராக பதவி வகிக்கும் மு.க.அழகிரி பாராளுமன்ற கூட்டங்களில் பெரும்பாலும் கலந்து கொள்வதில்லை. இதற்கு காரணம், அவருக்கு ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் பேசத் தெரியாது என்று தி.மு.க கட்சிக்காரார்களே சொல்கிறார்கள்.
இந்நிலையில் மு.க. அழகிரி பொறுப்பு வகித்து வரும் மத்திய ரசாயன மற்றும் உரத்துறை அமைச்சகத்தில் சுமார் 1000 கோடி ஊழல் நடைபெற்று இருப்பதாக கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா சுட்டிக் காட்டியிருந்தார்.
அப்போது அப்படி எந்த ஊழலும் நடக்கவில்லை என்று மத்திய ரசாயன மற்றும் உரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. காய் முற்றினால் கடை தெருவிற்கு வந்து தான் தீரும் என்ற பழமொழிக்கு ஏற்ப, உரத்துறையில் 5000 கோடி ஊழல் நடைபெற்று இருப்பதாக சமாஜ் வாடிக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நரேஷ் அகர்வால் இன்று (01.03.2013) பாரளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். அதற்கான ஆவணங்களை வழங்க நான் தயாராக இருக்கிறேன்’’ என்று கூறினார்
மேற்படி ஊழல் குற்றச்சாட்டிற்கு விளக்கமாக பதில் அளிக்க வேண்டிய மத்திய அமைச்சர் மு.க. அழகிரி பாராளுமன்றத்திற்கு செல்லாமல் டிமிக்கி கொடுத்துள்ளார். இந்நிலையில் ராஜாங்க மந்திரி ஸ்ரீகாந்த் குமார் ஜெனா பாராளுமன்றத்தில் மாட்டிக்கொண்டு பாராளுமன்ற உறுப்பினர்களின் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறினார். இதனால் பாராளுமன்றத்தில் கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது.