ஜெ.ஜெயலலிதா விடுதலை : ஈழத்தமிழ் மக்கள் மகிழ்ச்சி!- யாழ் மாவட்ட பாராளுமன்ற  உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அறிக்கை!

tna

யாழ் மாவட்ட பாராளுமன்ற  உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்.

யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற  உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

அம்மா!

ஈழத்தமிழர்கள் மகிழ்கின்ற நாளொன்றை பெங்களுர் நீதிமன்றம் நீங்கள் விடுதலை செய்யப்பட்ட செய்தி தந்திருக்கின்றது.

தமிழ் நாட்டின் பலமும், எண்ணங்களும், ஆதரவும் எங்கள் மக்களின் வாழ்க்கையில் என்றும் இரத்த உறவாகிப் போயிருக்கின்றது.

மாண்புமிகு முன்னாள் தமிழக முதல்வர் பொன்மனச்செம்மல் திரு.எம்.ஜி.ஆர் அவர்களின் இரக்கமும், ஆதரவும், உதவியும், புரிதலும் ஈழத்தமிழர்களை மெய்சிலிர்க்க வைக்கின்ற ஒன்றாக இன்றுவரை உணரப்படுகின்றது.

எம்.ஜி.ஆர் அவர்கள் நீண்ட ஆயுளுடன் இருந்திருந்தால் என்றோ எமது மக்களுக்கு சுபீட்சம் அமைதி சுதந்திரம் கிடைத்திருக்கும்.

முள்ளி வாய்க்காலில் ஒரு பெரும் இனப்படுகொலைக்குள் ஈழத்தமிழர்கள் சிக்குண்டு சிதைந்து அகதியாகி நிர்க்கதியாகும் நிலை ஏற்பட்டிருக்காது.

ஆனாலும், அவரின் எண்ணத்தில் எழுந்த அ.இ.அ.தி.மு.கவின் தலைமைப் பொறுப்பு தங்களிடம் கொடுக்கப்பட்டதில் இருந்து தமிழர்கள் மத்தியில் ஒரு நம்பிக்கை ஊற்று மீண்டும் கிளம்பியது.

உங்களுக்கு கிடைக்கும் பொருத்தமான காலத்துக்காக ஈழத் தமிழினம் காத்திருந்தது. அந்த நம்பிக்கை வீண்போகவில்லை.

பெரும் இடர்களை கடந்து நீங்கள் மீண்டும் தமிழக முதல்வர் ஆனீர்கள்.  நீங்கள் பதவியேற்ற காலம் மிகமுக்கியமானது. தமிழகத்தை மட்டுமல்ல எல்லாம் இழந்து நிர்க்கதியாகி நிற்கும் ஈழத் தமிழர்களையும் கைதூக்கி விட்டு காப்பாற்ற வேண்டிய பாரிய பொறுப்பும் உங்கள் கையிலேயே தரப்பட்டது. அது மிகவும் பொருத்தமானதும் கூட.

தமிழக மக்களின் நம்பிக்கையையும், ஈழத்தமிழர்களின் நம்பிக்கையையும் காப்பாற்றும் வகையில் இலங்கையில் தமிழர்கள் வகைதொகையின்றி கொல்லப்பட்ட இனப்படுகொலை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானங்களுக்கு வலுச்சேர்க்கும் வகையில் தமிழக சட்டசபையில் தீர்மானங்களை நிறைவேற்றி தமிழர்கள் மனதில் நீங்காத இடத்தை பெற்றுள்ளீர்கள்.

உங்கள் காலத்தில் ஈழத்தமிழர்களுக்கு ஒரு நிரந்தரமான சுபீட்சமான சுதந்திரமான வாழ்வு கிடைக்குமென்று தமிழ் மக்கள் மலையாக நம்புகின்றார்கள்.

ஈழத்தமிழர்களின் தொப்பூழ் கொடி உறவான தமிழகத்துக்கு நீங்கள் தலைவியாக இருப்பது. எங்கள் பலம்.

எங்களுக்கு வலி வருகின்ற போது, காயங்கள் வருகின்ற போது, துன்பங்கள் நேர்கின்ற போது எப்படி தமிழகம் துடிக்குமோ, அதே வலி உங்களுக்கு துன்பங்கள் நேர்கின்ற போது உங்கள் மீது தடைகள் ஏவப்படுகின்ற பொழுது எங்கள் மக்களுக்கும் ஏற்படுகின்றது.

பெங்களுர் சிறையில் நீங்கள் இருந்த போது ஈழத் தமிழ் மக்கள் மிகவும் கவலை கொண்டிருந்தனர். உங்கள் விடுதலையை அவர்கள் வேண்டி நின்றனர். தமிழகம் வஞ்சகர் கையில் சென்று விடுமோ என்று அஞ்சினர். ஆனால், நீங்கள் மக்களுக்கு செய்த நல்ல காரியங்களில், இருந்த தர்மம் எங்களோடு இருந்ததால் நீங்கள் வென்றீர்கள் விடுதலை ஆனீர்கள்.

மாண்புமிகு அம்மா! விடுதலையாகி மீண்டும் தமிழகத்தின் அரியணையில் ஏறி நீங்கள் நல்லாட்சி நடத்த இருக்கும் இந்தவேளையில் ஈழத்தமிழர்களின் சார்பில் எம் மகிழ்ச்சியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

எப்பொழுதும் உங்கள் பின்னே நிற்கப் போகும் தமிழ் மக்களுக்காக உங்கள் காலத்தில் உயர்ந்த ஆதரவை தந்து ஈழத் தமிழர்கள் நிம்மதியாக வாழ உங்கள் நல்லாட்சி அதிகாரம் பயன்பட வேண்டுமென உலகத் தமிழினம் எதிர்பார்க்கின்றது.

ஈழத் தமிழர்களுக்கு அருகிலிருக்கும் பலம் நீங்கள். எப்பொழுதும் ஆட்சிப்பீடம் ஏறும் நிகரற்ற வல்லமையை கொண்டுள்ளீர்கள் நீங்கள். நீண்ட நெடும் ஆயுளுடன், தமிழ் மக்களுக்காக நீங்கள் வாழவேண்டும், ஆளவேண்டுமென வாழ்த்துகின்றோம்.

-எஸ்.சதிஸ் சர்மா.