சினிமாவை பார்த்து ரசிக்கலாமே தவிர, நிஜ வாழ்க்கைக்கு எடுத்துக்கொள்ள கூடாது : தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.ரவி குமார் பேச்சு!

DCP2 (1) DCP2 (2) DCP3 DCP4 DCP5 DCP6தூத்துக்குடி மாவட்டம், திருவைகுண்டம் வட்டம், பொன்னங்குறிச்சி கிராமத்தில் நடைபெற்ற சமூக நல்லிணக்க முகாமில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.ரவி குமார் பொது மக்களிடம் கலந்துரையாடி அவர்களின் தேவைகளை கேட்டறிந்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.ரவி குமார் தெரிவித்தாவது:

இன்று சமூக நல்லிணக்கத்தைப் பேணும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் முதற்கட்டமாக ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில் உள்ள 7 கிராமங்களில் 16 அரசு துறைகளை ஒருங்கிணைத்து “சமூக நல்லிணக்க முகாம்கள்” நடத்தப்பட்டன.

இன்று ஆதிச்சநல்லூர், வெள்ளுர், புதுக்குடி ஆகிய கிராமங்களை ஒருங்கிணைத்து பொன்னங்குறிச்சி கிராமத்தில் இந்த சமூகநல்லிணக்க முகாம் நடைபெறுகிறது.

இன்று நடைபெறும் இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பல கோரிக்கைகள் வைத்துள்ளீர்கள். அரசு உங்களுக்காக அனைத்து உதவிகளையும் செய்வதற்கு தயாராக இருக்கிறது. இந்த நிகழ்ச்சி நடைபெறும் பள்ளி வளாகத்திற்கு சுற்றுச்சூழல் அமைப்பதற்கே 3 ஆண்டு காலங்கள் நீங்கள் கோரிக்கை வைத்து பல தடைகளை தாண்டி 6 மாதங்களுக்கு முன்புதான் நிறைவேறியுள்ளது.

ஆதிச்சநல்லூர் பகுதிக்கு ரூ.9.25 லட்சம் செலவில் குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அரசுத்துறையை நீங்கள் நம்ப வேண்டும். சின்ன சிறு வசதிகள் கேட்ட கோரிக்கைகள் உடனுக்குடன் நிறைவேற்றிதரப்படும்.

இளைஞர்கள் வேகத்தை உழைப்பில் காண்பிக்க வேண்டும். சினிமாவை பார்த்து ரசிக்கலாமே தவிர, நிஜ வாழ்க்கைக்கு எடுத்துக்கொள்ள கூடாது. சினிமாவில் ஹீரோக்கள் செய்யும் செயல்களை நீங்கள் நிஜ வாழ்க்கையில் செய்தால், வில்லனாகத் தான் ஆக முடியும்.

படித்துவிட்டு வேலைக்கு போகாத இளைஞர்கள் சுய தொழில் செய்து முன்னேறலாம். அரசு தொழில் தொடங்குவதற்கு பல உதவிகளை செய்து வருகிறது. மானியத்துடன் கூடிய கடன் உதவிகளை அளித்து வருகிறது.

இந்த முகாம்கள் மூலம் இளைஞர்களுக்கு உயர் கல்வி ஆலோசனை, திறன் வளர்ப்பு பயிற்சி, அரசு வேலை வாய்ப்புக்கான பணியாளர் தேர்வுக்கான பயிற்சி, தனியார் வேலை வாய்ப்பை உருவாக்குதல், காவலர் தேர்வுக்கான பயிற்சி, சுய தொழில் ஊக்குவிப்பு, வருவாய்த்துறை சம்பந்தப்பட்ட அனைத்து உதவிகள், முதியோர் ஓய்வூதியம், பட்டா மாறுதல், இலவச பட்டா போன்ற அனைத்து துறை பயன்களையும் உங்களுக்கு உங்கள் ஊரிலேயே கிடைக்கும் விதத்தில் இம்முகாம்கள் செயல்படுகிறது.

முகாம்களில் பொதுமக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. பல நிறுத்தப்பட்ட பேருந்துகள் மீண்டும் இயக்கப்படுகின்றன என்றார்.

இம்முகாமில் பசுமை வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்ட ஆணைகளையும், விலையில்லா வீட்டுமனைப் பட்டாவினையும், பட்டா மாறுதல் ஆணையினையும், மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் மூலம் முதியோர் உதவித்தொகை, திருமண உதவித்தொகை, இறப்பு நிவாரண உதவித்தொகை, கல்வி உதவித் தொகையினையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் அடையாள அட்டையினையும், மருத்துவத் துறையின் சார்பில் மகளிர்களுக்கு டாக்டர்.முத்துலெட்சுமிரெட்டி மகப்பேறு நிதியுதவித்திட்ட தகவல் படிவத்தினையும், கர்ப்பினி பெண்களுக்கு தாய்மை என்ற கையேட்டினையும், கிராம விளையாட்டு மற்றும் குழு போட்டிகளிலும் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்களையும், சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.ரவி குமார் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் சார் ஆட்சியர் கோபாலசுந்தரராஜ், மகளிர் திட்ட இயக்குநர் இந்துபாலா, துணைகாவல் கண்காணிப்பாளர் கோபால், திருவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் விஜயகுமார், மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) ஜார்ஜ் மைக்கேல் ஆண்டனி, மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலா கமலம், ஆதிச்சநல்லூர் ஊராட்சித்தலைவர் ஆனந்தலதா, துணை தலைவர் நல்லகண்ணு, வெள்ளுர் ஊராட்சித் தலைவர் புஷ்பலதா, துணைத்தலைவர் முத்தையா, மாவட்ட இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் பூபதி உதவி மக்கள் தொடர்பு அலுவலர் சி.குமார், வட்டாட்சியர் இளங்கோ, வட்டாரவளர்ச்சி அலுவலர் பொற்செழியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

-பி.இசக்கி @ கணேசன்.