சிங்கப்பூர் புக்கிட் பாஞ்சாங்கில் இருக்கும் சிங்டெல் கட்டடத்தில் ஏற்பட்ட தீயால் கைபேசி, தொலைபேசி, தொலைக்காட்சி சேவைகள் பாதிக்கப்பட்டன. நேற்று (09.10.2013) மதியம் 3.40 மணிக்கு ‘கைபேசி, இணையம் பாதிக்கப்படிருக்கலாம். சீக்கிரமே அவை சீராக்கப்படலாம்’, என்று இணையச் சேவை வழங்கும் ஸ்டார் ஹப் இணைய ‘டுவீட்ட’ரில் கூறி இருந்தது.
சிங்கப்பூர் குடிமை தற்காப்புப் படை வந்த பின்னர் முதல் தளத்தில் ஏற்பட்ட தீ 20 நிமிடங்களில் அணைக்கப்பட்டது. அதற்குள் 50 பேர் கட்டடத்தை விட்டு வெளியேறிவிட்டிருந்தனர். யாருக்கும் காயமேற்படவில்லை.
தீவு எங்கிலும் 80 க்கும் மேற்பட்ட வங்கிக் கிளைகளின் தானியங்கி சேவைகள் இயங்கவில்லை. சாங்கி விமான நிலையம், தெம்பனிஸ் ஈஸ்ட், தோ பாயோ செண்ட்ரல், உட்லாண்ட்ஸ் வெஸ்ட், அங் மோ கியோ செண்ட்ரல், நீ ஆன் சிட்டி உள்ளிட்ட டிபிஎஸ், பிஓஎஸ்பி வங்கிகள் பாதிக்கப்பட்டன. “இணைய, தொலைபேசி சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. நிலைமையை நாங்கள் கூர்ந்து கண்காணித்து வருகிறோம். முடிந்தவரை விரைவாக இச்சேவைகளை மீண்டும் தொடங்குவோம்,” என்று ஸ்டார் ஹப்பின் முதன்மை தொழில்நுட்ப அதிகாரி மோக் பாக் லிம் கூறியிருந்தார்.