ஐ. நா. சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் சிறப்பு பிரதிநிதியுடன், இலங்கை வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் சந்திப்பு !

un-officer-slun-officer-j

ஐக்கிய நாடுகளின் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் சிறப்பு பிரதிநிதி சலோகா பெயானி இன்று (03.12.2013) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளார். ஐந்து நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள ஐ.நா சிறப்பு பிரதிநிதி, அவ்விஜயத்தின் ஒரு பகுதியாகவே இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இதன்போது, வட மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி மற்றும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஆகியோரை தனித்தனியாக சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். இதேவேளை, இடம்பெயர்ந்த மக்களையும் பாதிக்கப்பட்டுள்ள சமூகங்களையும் அவர் நேரடியாக சந்தித்து கலந்துரையாடவுள்ளார். அத்துடன், இந்த விஜயம் குறித்த முழுமையான அறிக்கை அடுத்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழுவில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

ஐக்கிய நாடுகளின் சபையின் சிறப்பு பிரதிநிதி சலோகா பெயானியுடனான சந்திப்பின் போது வடக்கில் இருந்து இராணுவம் வெளியேற்றப்படும் வரையில் தமிழ் மக்கள் சுதந்திரமான வாழ்க்கையை பெற்றுக் கொள்ள முடியாது என வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்த ஐ.நாவின் சிறப்பு பிரதிநிதியுடன் வடமாகாண முதலமைச்சர் இன்று மதியம் சந்திப்பொன்றை நடாத்தினார். இந்த சந்திப்பின்போது மாகாண சபை உறுப்பினர் திருமதி அனந்தி சசிதரனும் முதலமைச்சருடன் உடன் இருந்தார்.

இதன்போது வலி.வடக்கில் உயர்பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் பொது மக்களின் காணிகளை இராணுவம் அபகரிப்பது தொடர்பாகவும் மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா உள்ளிட்ட வடமாகாணத்தின் ஏனைய மாவட்டங்களில் தமிழர்களின் காணிகள் பறிக்கப்படுவது தொடர்பாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இதுதவிர இடம்பெயர்ந்த மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள், மக்களின் அன்றாடப் பிரச்சினைகள், மனித உரிமை மீறல்கள், காணாமல் போனவர்களின் பிரச்சினைகள், உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாகவும் இதன்போது எடுத்துக் கூறப்பட்டுள்ளது.